எதிர்கட்சிகள் கூட பாஜ அரசு மீது எந்தப் புகாரும் கூற முடியாது : புதுவையில் அமித்ஷா பெருமிதம்
6/27/2017 4:07:57 PM
புதுச்சேரி : புதுச்சேரி பாஜ சார்பில் தொழில் வல்லுநர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து ெகாண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் அரசில் 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆண்டுதோறும் அரசின் செயல்பாடு குறித்த கணக்கை மக்களிடம் சமர்ப்பிக்கப்படும். பங்குச் சந்தை சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியினர்கூட பாஜ அரசு மீது எந்த புகாரும் கூற முடியாது. கொள்கை இல்லாத அரசு போல் தற்போதுள்ள அரசு இல்லை.
பிரதமர் மோடி பதவிக்கு வந்தபோது 60 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. பின்னர் அவர் மேற்கொண்ட முயற்சியால் 28.6 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன.
50 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு 106 திட்டங்களை ஏழை மக்களுக்காக கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். வரும் 2018ம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தரப்படும். மீதியுள்ள 2 ஆண்டுகளில் உலகில் தலைசிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா இருக்கும். மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது கூட புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதியை அவர் பெற்று தரவில்லை. புதுச்சேரி அரசு மீது குற்றச்சாட்டு ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் என் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான ஊழல் நிறைந்த அரசை நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.