ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஜூலை 11ல் முற்றுகை போராட்டம் நெடுவாசல் போராட்டக்குழு முடிவு
6/26/2017 3:03:27 PM
ஆலங்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்கள் துவங்கினர். 75 நாட்களாக போராடியும் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் போராட்டத்தை தீவிரப்படுத்த, நெடுவாசல் உள்ளிட்ட 70 கிராம மக்கள், முக்கிய பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. எம்எல்ஏ மெய்யநாதன், முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம், முன்னாள் எம்எல்ஏ ராஜ சேகரன், டைரக்டர் கவுதமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செங்கோடன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிவேலு, நடிகர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 70 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட்டது.
வலிமையான போராட்டத்தை முன்னெடுத்துசெல்லும் நோக்கில் 31 பேர் கொண்ட உயர்மட்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. போராட்டத்தை உயர் மட்டக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து நடத்துவது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இப்பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் ஜூலை 11ம் தேதி காலை 7 மணி முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டைரக்டர் கவுதமன் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து பிரச்னைகளுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்துக்குப்பிறகும், இத்திட்டம் ரத்துசெய்யப்படா விட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார். இன்று 76வது நாளாக போராடடம் நீடித்துள்ளது. நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் போராட்டத்தில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.