தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை
6/26/2017 3:01:27 PM
சென்னை : உலக முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு, மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இதன்படி இந்தாண்டு ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
திருவல்லிக்கேணி மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதுபோல் ராயப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனால் மசூதிகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாகவும் தொலைபேசியில் தெரிவித்தனர். திருவள்ளூர்; திருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது. திருவள்ளூர் நகரில் வசிக்கும் முஸ்லிம் மக்கள், புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.