உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 100 ஆடுகள் மடிந்தன: விவசாயிகள் அதிர்ச்சி
6/23/2017 3:27:41 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 100 ஆடுகள் மடிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்து நெல்லி கிராமம் உள்ளது. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள். ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 20 ஆடுகள் முதல் 100 ஆடுகள் உள்ளது. காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மாலையில் விவசாயிகள் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், விவசாயிகளின் ஆடுகள், அவ்வப்போது இறந்தன. விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று ஒரு விவசாயியின் 15 ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இதுவரை இறந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பீதியடைந்தனர். இறந்த ஆடுகளை எந்தவித பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்த முடியாது என்பதால் வயல்வெளியில் புதைத்தனர்.
இதுகுறித்து நெல்வாய் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர், முகாமிட்டு ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘புதிய மழை பெய்யும் போது வளரும் புற்களின் மேல் ஒருவித கிருமி உண்டாகிறது. அந்த கிருமியை சாப்பிடும் போது உண்டாகும் நோய்க்கு பெயர்தான் துல்லுமாரி. ஆடுகள், இந்த கிருமி படர்ந்த புற்களை சாப்பிடும் போது இந்த துல்லுமாரி நோய் தாக்கியுள்ளது. அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீர் திடீரென ஆடுகள் இறப்பதால் எங்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இறந்த ஆடுகளுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.