ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை
6/22/2017 3:23:51 PM
நாகர்கோவில்: நாகர்கோவிலில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து வீட்டில் சிறை வைத்து பலாத்காரம் செய்த புரோட்டா மாஸ்டரை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் குருசடி பகுதியில் வசிக்கும் ராபர்ட் பெல்லார்மின் என்பவரின் வீட்டில் 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக ைசல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது. இதையடுத்து சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது ராபர்ட் பெல்லார்மின் வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரமாக கதவை தட்டினர். அப்போது 16 வயது சிறுமி ஒருவர் கதவை திறந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த சிறுமி கதறி அழுதார். இதையடுத்து அந்த சிறுமியை, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட சிறுமியை, நாகர்கோவில் அடுத்த பள்ளம் துறை பகுதியை சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின் (41) என்பவர் ரூ.1 லட்சம் விலை பேசி திருமணம் செய்தது தெரிய வந்தது. ராபர்ட் பெல்லார்மினுக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த ராபர்ட் பெல்லார்மின் 2வது திருமணம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
நண்பர் ஒருவர் மூலம், தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை ரோடு பகுதியில் வசிக்கும் ஒரு ஏழ்மையான குடும்பம் பற்றிய தகவல் தெரிய வந்தது. அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு 16 வயது ஆகிறது. தற்போது 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய பெற்றோர் திட்டமிட்டு இருந்த தகவல் ராபர்ட் பெல்லார்மினுக்கு தெரிய வந்தது. இதையடுத்து தனது நண்பர் உதவியுடன், அந்த குடும்பத்தை தொடர்பு கொண்ட ராபர்ட் பெல்லார்மின், தனக்கு மகளை திருமணம் செய்து வைத்தால் உங்கள் குடும்பத்தை கவனித்துக் ெகாள்வதாவும், ரூ.1 லட்சம் வரை தருவதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் விலை பேசினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கடந்த மே மாதம் 10ம் தேதி, குலசேகரப்பட்டினம் கோயிலுக்கு வெளியே வைத்து மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்துக்கு பின் குருசடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி இருக்கிறார். அப்போது தன்னுடன் உடல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே, உனது பெற்றோருக்கு விலை பேசிய படி பணம் கொடுப்பேன். உங்கள் குடும்ப கடனை தீர்ப்பேன் என ராபர்ட் பெல்லார்மின் கூறி, சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
புரோட்டா கடையில் வேலை பார்த்து வரும் ராபர்ட் பெல்லார்மின், பகலில் வேலைக்கு செல்லும் போது சிறுமியிடம் வெளியே வரக்கூடாது. வீட்டை உள் பக்கமாக பூட்டிக் கொள்ள வேண்டும், அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசக்கூடாது என கூறி உள்ளார். சிறுமியும் அவர் கூறிய படி வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை. ராபர்ட் பெல்லார்மின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்திய பின்னர் அக்கம் பக்கத்தினர் விசாரணையில் இறங்கினர். அப்போது தான் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்துள்ள தகவல் தெரிய வந்தது. அதன் பின்னரே சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தற்போது சிறுமி அளித்த புகாரின் பேரில், ராபர்ட் பெல்லார்மின் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராபர்ட் பெல்லார்மின் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறார்கள்.