மதுக்கடைகளுக்கு எதிராக ஓயாத போராட்டம் போர்டுக்கு தீ வைப்பு கல்வீச்சு, முற்றுகை
6/16/2017 5:20:21 PM
கரூர்: தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கரூர்: பாலம்மாள்புரம் நகராட்சி மயானம் அருகே ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. இதனருகே தற்போது மேலும் 2 கடைகள் திறக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தாரைதப்பட்டைகள் முழங்க டாஸ்மாக் கடையை நோக்கி நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் வந்தனர். டாஸ்மாக் கடை போர்டை கழற்றி கொண்டு வந்து சாலையில் போட்டு தீவைத்து கொளுத்தினர். பின்னர் அந்த வழியாக வந்த ஒரு வேன் மீது, ஒருவர் திடீரென கல்வீசினார். இதில் அந்த வேனின் கண்ணாடி உடைந்தது. அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் சட்டசபை கூட்டம் முடிந்ததும் உரிய அனுமதிபெற்று கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
திருவாரூர்: ஆத்தூரில் உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி நேற்று 100 பெண்கள் உட்பட 200 பேர் கடைமுன்பு திரண்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை சூறையாட முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் கடையின் முன்புறம் போடப்பட்டிருந்த டியூப் லைட்கள் மற்றும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக உத்தரவாதம் அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சை: கும்பகோணம் அருகே இலந்துறையில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி, மாங்குடி, குடமங்கலம், நடுவக்கரை, இலந்துறை, விட்டலுார், திருமலைராஜபுரம், அந்தமங்கலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நேற்று கடைமுன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தாசில்தார் கார்த்திகேயன், 2 மாதத்தில் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
புதுகை: கந்தர்வகோட்டையில் திருச்சி செல்லும் சாலையின் இடது புறம் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தற்போது வலதுபுறம் மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அரசியல் கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.