ராகுல்காந்தி பிறந்த நாள் 100 சிறு வியாபாரிகளுக்கு கை சின்னம் பொருத்திய பெரிய குடைகள்: இரா.மனோகர் அறிக்கை
6/16/2017 5:19:16 PM
சென்னை: இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தை ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தலைவர் என்கின்ற சர்வாதிகார போக்கில் ஒற்றை மனிதனுக்கு சேவகம் செய்து சாமரம் வீசுகிற மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆற்றல் கொண்ட வீர உள்ளம் கொண்டவர் நம் இளம் தலைவர் ராகுல்காந்தி. பாராளுமன்றம் முன் நிற்கதியின்றி நிர்வாணக் கோலத்தில் வீதியில் நின்ற நம் விவசாயிகளின் கொடுமைகளை கண்டு அவர்களை சந்தித்து ஆதரித்து மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். மத்திய பிரதேசத்தில் மவுண்ட்சாரில், மண்ணாகிப் போன எம் வாழ்வை மீட்டெடுக்க வாங்கிய கடனை ரத்து செய் என்று வேண்டிய அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்ற கயமை ஆட்சியை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டவர் நம் ராகுல்காந்தி. 2004ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தன் கன்னிப் பேச்சில்,
‘‘நான் இந்த மன்றத்தில் இடம் பிடித்திருப்பதை விட எம் தேசத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிப்பதையே பெருமையாக கருதுகிறேன்’’ என்று சூளுரைத்தவர் ராகுல்காந்தி.அவரது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் விதமாக வரும் 19ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை-1, எண்.54, ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில் அன்றாடம் வருமானம் ஈட்டும் 100 சிறு வியாபாரிகளுக்கு மழையிலும், வெயிலிலும் தங்கள் பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக கை சின்னம் பொருத்திய மூவர்ணத்தில் பெரிய அளவிலான குடைகள் வழங்கப்படுகிறது. இளம் தலைவர் ராகுல்காந்திக்கு மாநில பேச்சாளர் மரிமகாதேவன் வாழ்த்துரை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.