மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்
6/16/2017 5:07:48 PM
புதுச்சேரி: புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தனி நபர் மற்றும் அரசு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு சார்பில் விலங்குகள் வதை தடுப்பு - கால்நடை விற்பனை விதிமுறைகளை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மே 23ம் தேதி விலங்குகள் வதை தடுப்பு - கால்நடை விற்பனை விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் கால்நடை வளர்ப்போரின் உரிமையை பறிப்பதாகும். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் உணவை உண்ணுவதற்கும், விரும்பும் மதத்தை கடைபிடிப்பதற்கும், விரும்பும் ஆடையை உடுப்பதற்கும் தனி மனித சுதந்திரம் உண்டு.
ஆகவே மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டுக்கறி, ஒட்டகக்கறி, எருமைக்கறி போன்றவைகள் உண்ணக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரெஞ்சு கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்துள்ள புதுச்சேரி மக்கள் அவரவர்கள் உண்ணும் உணவிற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது. புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசாணையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். எனவே, மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் எம்எல்ஏக்களின் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.