சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்
6/15/2017 3:48:49 PM
ரோத்தக்: யோகா குரு பாபா ராம்தேவ், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரியானா மாநிலம், ரோத்தக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவேன் என பேசினார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், அரியானா மாநில முன்னாள் அமைச்சருமான சுபாஷ் பத்ரா, ராம்தேவ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அரியானா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மே மாதம் 12ம் தேதி நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் ஆஜராக வேண்டும் என கூறியதுடன், ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
ஆனால், பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் அப்போது ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜூன் 14ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்றும் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஹரிஷ் கோயல், பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கை ஆகஸ்டு மாதம் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.