கள்ளக்காதலியை பிரித்ததால் ஆசிரியரை வெட்டிக் கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
6/15/2017 3:47:09 PM
ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த இவர், அப்பணியை விட்டுவிட்டு ஏலகிரிமலையில் உள்ள தனியார் விடுதிகளில் சேவை வரிகளை வசூலித்து, அதை வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டும் பணியை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை தாயலூர் அடுத்த புத்தூர் சாலையோரம் லட்சுமணன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிந்து லட்சுமணனின் 2வது கள்ளக்காதலியான தாயலூர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரையும், அவரது கணவன் தீபக்கையும் பிடித்து விசாரித்தனர். வனிதா அளித்த தகவலின்பேரில் வனிதாவின் முன்னாள் கள்ளக்காதலன் புதூர்நாட்டை சேர்ந்த அண்ணாமலை(27) என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் அண்ணாமலை, லட்சுமணனை வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. அண்ணாமலை அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட லட்சுமணனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு ஏலகிரி புங்கனூரை சேர்ந்த திருமணம் ஆன கவிதா(45) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது வீட்டின் எதிரே பழக்கடை வைத்திருந்த தாயலூர் புத்தூர் பகுதியை சேர்ந்த வனிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அதுவும் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரிமலையில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொள்ள அண்ணாமலை பஸ்சில் வந்தார். அப்போது அவர் தனது அருகில் அமர்ந்திருந்த வனிதாவின் செல்போன் எண்ணை வாங்கி உள்ளார். செல்போன் மூலம் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் வனிதா அண்ணாமலையை தவிர்த்துவிட்டு, மீண்டும் லட்சுமணனுடன் உறவை தொடர்ந்தார். இதையறிந்த அண்ணாமலை, லட்சுமணனுடனான உறவை விட்டுவிடும்படி கூறினார். ஆனால், வனிதா அதனை ஏற்க மறுத்ததால் அண்ணாமலை ஆத்திரமடைந்தார். மேலும் வனிதாவை, லட்சுமணன் தனது பைக்கில் தினமும் அழைத்துச்சென்று வீட்டில் விட்டு வருவதும் தெரிந்தது. கடந்த 12ம்தேதி வனிதா வீட்டிற்கு திரும்பும் வழியில் மது அருந்திவிட்டு போதையில் காத்திருந்தார் அண்ணாமலை. அப்போது வனிதாவை லட்சுமணன் வழக்கம்போல் பைக்கில் அழைத்து வந்து தாயலூர் அடுத்த புத்தூர் அருகே மறைவான இடத்திற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதைப்பார்த்த அண்ணாமலை, தான் வைத்திருந்த அரிவாளால் லட்சுமணனை சரமாரி வெட்டினார். இதில், லட்சுமணன் அதே இடத்தில் இறந்தார். வனிதா அங்கிருந்து தப்பியோடினார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.