பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு
6/15/2017 3:46:32 PM
புதுடெல்லி: மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘#HelpMeWCD என்ற ஹேஷ்டேக்கில் டுவிட்டரில் புகார் தெரிவிக்கலாம்’ என்றும், ‘புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் புகார் அளிக்கும்வகையில் ‘ஐ எம் ட்ரோல்ட்’ (‘I am Trolled’ ) ஆப்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
மேலும், உள்நாட்டு வன்முறை, சுகாதார மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளில் ‘சகி’ என்னும் 600 உதவி மையங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான ‘ஆப்’பை நேற்று அறிமுகம் செய்த மத்திய அரசு இனிமேல் பாதிக்கப்படும் பெண்கள் இதற்காக காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க வேண்டியதில்லை. டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் புகார் கொடுத்தால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளது.