மாடுகளை விற்க கூடாது என உத்தரவு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்
6/15/2017 3:40:45 PM
புதுடெல்லி: இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்த மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடு, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கொண்டு வந்த தடை சட்டத்தினை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் கலந்து கொள்ளும் போராட்டக்காரர்கள் மாட்டிறைச்சியை சாலையில் வைத்து சமைத்து, மாட்டிறைச்சியை உண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த இந்த அரசு ஆணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ‘’மிருக வதை தடைச் சட்டத்தினை அமல்படுத்த 4 வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. உணவு என்பது மக்களின் உரிமை. அதில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. மேலும் மத்திய அரசின் இந்த தடை உத்தரவு சட்டம் மாநில அரசுகளுக்கும் பொருந்துமா என விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது. இதைத் தவிர பசுவதை தடுப்பு சட்டத்தினை மத்திய அரசு திரும்பபெற வேண்டுமென பாஜக தவிர பெரும்பாலான கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டமான மட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க தடையை எதிர்த்து ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பாக முகமது அப்துல் பகீம் குரோசி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த பொது நல வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் கோடை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.கே அகர்வால், எஸ்.கே.கவுல் முன்னிலையில் விசாரணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘‘மத்திய அரசு மாட்டிறைச்சி விவகாரத்தில் பிறப்பித்த அரசாணையானது மாடு வளர்ப்போரிடம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். மேலும், வெளிநாட்டுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதை ஏன் தடை செய்யக் கூடாது. மேலும், மாடு விற்க, வாங்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடு குறித்து 2 வாரத்தில் விளக்கம் தர வேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.