சொந்த தொகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை எச்.வசந்தகுமார் எம்எல்ஏ ஆய்வு
6/14/2017 4:18:03 PM
சென்னை: நெல்லையை அடுத்த தருவை, பாளையம் கால்வாயில் 2.6 கிமீ தூர்வாரும் பணியை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ எச்.வசந்த்குமார் துவங்கி வைத்து பார்வையிட்டார். செங்களாகுறிச்சி பெரியகுளம் கால்வாய், சிங்கிகுளம் பொன்னாக்குடி கால்வாய், பத்மநேரி சித்தாற்று பாதை, கழுவூர் குளம் உள்ளிட்ட குளங்கள், கால்வாய்கள் அவரது சொந்த பணத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு உள்ளது. தெற்கு கழுவூர் பெரியகுளம், வடக்கு கழுவூர் பெட்டைக்குளம், இடையன்குளம் ஊராட்சி பச்சை ஆலங்குளம், மாணிக்கன்குளம், கான்சாபுரம் ஊராட்சி நொச்சிக்குளம் ஆகிய குளங்கள், நாகன்குளம், படமைலயார்குளம் ஆகியவற்றின் நீர்வரத்து பாதை சரிசெய்தல் மற்றும் தருவை கிராமத்தில் இருந்து பாளையம் கால்வாய் பிரிவுக்கு உட்பட்ட சுடுகாடு பெரிய மடை பிரிவிலிருந்து பழைய குளம் பிரிவு வரை உள்ள கால்வாய் தூர்வார நெல்லை மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தருவை கிராம பாளையம் கால்வாய் முதல் ரீச் துவங்கும் இடத்திலிருந்து சுமார் 2 கிமீ, 600 மீட்டர் தொலைவில் உள்ள முதல் ரீச் சுத்தம் செய்யும் பணியை வசந்த்குமார் எம்எல்ஏ துவங்கி வைத்தார். இதற்காக தனது சொந்த ெசலவில் புதிய ஜேசிபி இயந்திரம் வாங்கி, விவசாயிகள் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அப்பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வசந்த்குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘’ மக்கள் பயன்பெறும் வகையில் இதுவரை 2 சிறிய குளங்கள், 2 பெரிய குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணிகளை செய்து வருகிறேன். தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை’ என்றார்.