ஆவடி 8வது வார்டு மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா
6/14/2017 4:11:31 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லியிடம், புரட்சி பாரதம் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் முல்லை கே.பலராமன் கொடுத்த மனுவின் விவரம்: ஆவடி நகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் காலனியில் 8 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம நத்தம் சர்வே எண் 304 மற்றும் 305ல் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடும்பத்தினருக்கு, இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், படித்த இளைஞர்கள் மேற்படிப்புக்கும் தொழில் தொடங்கவும் வங்கிக்கடன் பெற பட்டா தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சான்றுகளை பெறவும், ஓய்வூதியம் பெறவும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, 5 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, சரஸ்வதி நகர் சாலையில் சர்வே எண் 68ல் உள்ள அரசு இடத்தில் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நகர் பொதுநல சங்க நிர்வாகிகள் பி.மன்மதன், வி.சண்முகசுந்தரம், கே.சேகர், முல்லை கே.ராஜசேகர், மூர்த்தி நகர் மணிமாறன், எஸ்.ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.