மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது
6/14/2017 4:06:34 PM
ஆவடி: ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த ஒரு பெண், ஆவடியை அடுத்த அரிக்கம்பேடு, ஜெகதீஸ்வரி நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல், வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு சென்றார். அவரிடம் ‘ என் தாய் என்னை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகிறார். எனவே என்னை விடுதியில் சேர்த்து படிக்க வையுங்கள் அல்லது போலீசிடம் அழைத்து சென்று புகார் கொடுங்கள்’ என்று கெஞ்சி அழுதுள்ளார்.
இதையடுத்து மாணவியை அழைத்து கொண்டு, ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி வழக்கு பதிவு செய்து விசாரித்து பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்திய தாயை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.