2வது முறையாக சம்மன் அனுப்பியும் பணபரிவர்த்தனை வழக்கில் ஆஜராகாமல் தவிர்த்த லாலு பிரசாத் மகள்
6/13/2017 5:11:40 PM
புதுடெல்லி: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு வருமான வரித்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் ஆஜராகவில்லை. பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகாரின்பேரில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
லாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததும், பினாமி மூலம் சொத்துக்களை வாங்கி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மிசா பாரதி மற்றும் அவரது கணவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. கடந்த வாரம் ஆஜராக வேண்டிய நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை. மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நேற்றும் மிசா பாரதி ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஜராகவில்லை என மிசா பாரதி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.