டெல்லி அருகே துணிகரம் வங்கி சுவரில் துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை
6/13/2017 5:10:33 PM
காஜியாபாத்: வங்கி சுவரில் துளையிட்டு லாக்கர்களில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். டெல்லி அருகே நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி அருகேயுள்ள காஜியாபாத்தின் மோதிநகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் உள்ள 435 லாக்கர்களில் வாடிக்கையாளர்களின் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கி திறக்கப்பட்டது. லாக்கர்கள் உள்ள அறைக்கு கேஷியர் சென்று பார்த்தபோது, 30 லாக்கர்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வங்கி சார்பில், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து ஆய்வு செய்தபோது, வங்கியின் சுவர் சுமார் 2 அடிக்கு அளவுக்கு துளையிடப்பட்டிருந்தது. இதன் வழியாக கொள்ளையர்கள் வங்கிக்கு உள்ளே சென்றது தெரியவந்தது.
வங்கியில் காணாமல் போன நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. நகைகள் கொள்ளைபோனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருடுபோன வங்கிக்கென்று காவலாளி இல்லை. இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லாததால் சுவரை உடைக்கும் சத்தம், அலார சத்தம் யாரும் கேட்கவில்லை. வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டதுடன், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் சுவரை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.