இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 11 பாக். கைதிகள் விடுவிப்பு
6/13/2017 5:03:26 PM
புதுடெல்லி:இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர், எல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பிலும் இறுக்கமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் காஷ்மீர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மேலும் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவுக்கு அந்நாடு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இத்தனை பரபரப்புக்கு மத்தியில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, பாக். பிரதமர் நவாஸ் ஆகியோர் சந்தித்தனர். அதிகாரப்பூர்வ பேச்சுகள் நடக்காத போதிலும் இருவரும் நட்பு பூர்வமான வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஷாங்காய் மாநாடு முடிந்த இரண்டு தினங்களுக்குள் இந்தியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 11 கைதிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. தண்டனை காலம் முடிந்த பிறகும் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர்கள் 11 பேரை இந்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்திய அதிகாரிகள் மூலம் வாகா எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுக்ககான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் சிறைகளிலும் இந்தியாவைச் சேர்ந்த 152 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் தண்டனை காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை அளிக்கும்படி பாகிஸ்தான் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் உறுதி செய்யும் பட்சத்தில் அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளின் உறவில் ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.