மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்
6/13/2017 5:00:06 PM
நாகை: தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நாளையுடன் நிறைவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். வங்க கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் நாகை, தஞ்சை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு 61 நாட்கள் மீன்பிடி தடைகாலத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தடைகாலம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 30ஆயிரம் விசைபடகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தடை காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், மீன்பிடி வலைகளை பின்னுதல், சேதமடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படுகிறது. பைபர் படகுகள் மட்டும் 2 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இதில் சிறிய வகை மீன்கள் மட்டுமே வலையில் கிடைக்கும். இதனால் பெரிய வகை மீன்கள் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மீன்கள் வரத்து குறைவால் பல மடங்காக உயர்த்தி விற்கப்பட்டது. இந்நிலையில் தடை காலம் நாளையுடன்(14ம் தேதி) நிறைவடைகிறது. நாளை நள்ளிரவு(15ம் தேதி அதிகாலை) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்படுகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள், உரிமம் பெற்ற படகுகளை ஆய்வு செய்து கணக்கெடுத்தனர். அப்போது படகுகள் குறித்த நீளம் உள்ளதா என அளந்து பார்த்தனர். அறிவுறுத்தப்பட்ட ஒளிரும் வர்ணம் பூசப்பட்டுள்ளதா, இன்ஜின் திறன் என பல்வேறு சோதனைகளை நடத்தினர். படகுடன் உரிமையாளர்களை நிற்க வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. நாகையில் கடந்த 4 நாட்களாக இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 550 விசைபடகுகள் ஆய்வு செய்யப்பட்டது. தடைகாலம் நாளையுடன் முடிவது பற்றி மீனவர் சங்கங்கள், பஞ்சாயத்தாருக்கு மீன்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 14ம் தேதி இரவு அதாவது 15ம் தேதி அதிகாைல முதல் கடலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைகாலம் முடிந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, வலைகள், மீன்பிடி உபகரணங்கள், ஐஸ் பெட்டிகளை ஏற்றுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நாகையில் நாளை நள்ளிரவு 12மணிக்கு மேல் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்படும். இதேபோல் மற்ற மாவட்டங்களில் மீனவர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்படும். நாளை நள்ளிரவு முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். மானிய டீசலும் விரைவில் வழங்கப்பட உள்ளது. தடை காலம் முடிவதால் மீனவர்கள் மீன்பிடிக்க உற்சாகத்தில் உள்ளனர்.