இந்தி நடிகை மர்ம சாவு
6/13/2017 4:13:07 PM
மும்பை: இந்தி நடிகை கிருத்திகா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை அழுகிய நிலையில் போலீசார் கண்டெடுத்தனர். இந்தி படங்களில் நடித்திருப்பவர் கிருத்திகா சவுத்ரி (30). உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த இவர் பாலிவுட்டில் நடிகை ஆகவேண்டும் என்ற ஆசையில் மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியிருந்தார். கங்கனா ரனாவத் நடித்த ரஜ்ஜோ படம் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் டி.வி. சீரியல்களில் நடித்ததுடன் மாடலிங்கும் செய்து வந்தார்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது வீட்டு கதவு பூட்டி கிடந்தது. நேற்று வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கிருத்திகா இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகியிருந்தது. இதுகுறித்து அம்போலி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் யாராவது கிருத்திகாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.