பேயோட்டிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட 2 அமைச்சர்கள்
6/12/2025 5:41:52 PM
அகமதாபாத்: குஜராத்தில் பேயோட்டிகளின் மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்ட சம்பவம் அங்கு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை போதாத் மாவட்டத்தில் கதாடா என்ற இடத்தில் பேயோட்டிகளின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான பேயோட்டிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசாமா, அந்த தொகுதி எம்எல்ஏவும், சமூக நீதித்துறை அமைச்சருமான ஆத்மாராம் பார்மர் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் அமர்ந்திருந்த மேடைக்கு அருகிலேயே பேய் பிடித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் ஏராளமான பேயோட்டிகள் அமைச்சர்களை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த வீடியோ வெளியாகி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சடங்குகளில் அமைச்சர்கள் கலந்து கொண்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக கல்வி அமைச்சர் சுதாசாமாவிடம் நிருபர்கள் கேட்ட போது, புனித ஆத்மாவை பக்தர்கள் வணங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன். இந்த விழாவில் மூட நம்பிக்கையை பரப்பும் எந்த நோக்கமும் கிடையாது. இது ஒரு வழக்கமான வழிபாடுதான் என்றார்.
இந்த நிகழ்ச்சியை அப்பகுதி பாஜ ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.