ம.பி.யில் அமைதி திரும்பியது முதல்வர் சவுகான் உண்ணாவிரதத்தை முடித்தார்
6/12/2025 5:40:33 PM
போபால்:மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்பியதையடுத்து முதல்வர் சவுகான் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 6ம் தேதி, மந்த்சூரில் விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதனை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் பலியாயினர்.இதனால் கடந்த 10 நாட்களாக அமைதியற்ற சூழல் நிலவிவந்தது. மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் சிவராஜ் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் 236 குழுவினர் நேற்று முன்தினம் முதல்வர் சவுகானை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்பியுள்ளதாக தெரிவித்த முதல்வர் சவுகான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று மாலை முடித்துக்கொண்டார். முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோசி கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.