தாயை வெட்டி கொலை செய்த மகன் கைது
6/12/2025 5:16:53 PM
சிவகங்கை:சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் காத்தான். இவரது மனைவி புவியம்மாள் (70). இவர்களது மகன் முருகேசன் (44). திருமணமாகவில்லை. காத்தான் இறந்து விட்டதால் மகனுடன் புவியம்மாள் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த முருகேசன், பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தாய்-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முருகேசன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து புவியம்மாளை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிவகங்கை தாலுகா போலீசார், இன்று காலை முருகேசனை கைது செய்தனர்.