பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு: பியூட்டிஷியன் வெட்டிக் கொலை
6/12/2025 5:09:20 PM
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (51). இவரது மனைவி உஷா ராணி. இவர்களுக்கு எழிலரசன், முகில்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த தாரா என்பவருடன் செல்வராஜ்க்கு பழக் கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து உஷாராணிக்கு தகவல் தெரிந்து, கணவருடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் செல்வராஜ் தாராவுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தாரா கர்ப்பமடைந்துள்ளார். இதனால் உஷாராணி, செல்வராஜிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
செல்வராஜ் கள்ளக்காதலியுடன் வீரகனூர் பகுதியில் வசித்து வந்தார். இவர்கள், திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மிதுரன் (12) என்ற மகன் உள்ளார். தாரா, வீரகனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தாராவுக்கும், அவரது தங்கை செரினாவின் கணவர் வில்லியத்துக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் செல்வராஜ்க்கும் கடந்த 3 மாதங்களாக வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், செல்வராஜ்க்கும் தாராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து செல்வராஜ் அடித்து துன்புறுத்துவதாக, ஆத்தூர் மகளிர் போலீசில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாரா புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து, செல்வராஜை பிரிந்த தாரா வீரகனூர் சந்தைப்பேட்டையில் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இங்கும் வில்லியம் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் அங்கு பல ஆண்களுடன் தாராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை, தாராவின் வீட்டுக்கு சென்ற செல்வராஜ், “இவ்வளவு பிரச்னை நடந்தும் இன்னும் கள்ளத்தொடர்பை கைவிடாமல், ஊர்மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்துகிறாயா?” என கேட்டுள்ளார். அப்போது தாராவும் செல்வராஜ் வைத்துள்ள கள்ளத்தொடர்பு குறித்து கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கொடுவாளால் சரமாரியாக வெட்டியதில், தாராவின் முகம் மற்றும் உடலில் வெட்டு விழுந்தது. கைகள் இரண்டும் துண்டானது. ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த தாராவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனிடையே வீரகனூர் போலீசில் சரணடைந்த செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் காவல்நிலையத்தில் தாரா மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.