பணப்பை என்று நினைத்து சாவியுடன் ஓடிய திருடர்கள்
6/12/2025 2:59:39 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நகைக்கடை உரிமையாளரிடம் பணப்பை என நினைத்து சாவி மட்டும் இருந்த பையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள் ஏமாற்றம் அடைந்தனர். உத்திரமேரூர் பஜார் வீதியில் நகை கடை நடத்தி வருபவர் அமர்தலால். இவரது கடையில் 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக வியாபாரம் முடிந்ததும், நகைக்கடையை பூட்டி விட்டு வசூல் பணத்தை பையில் எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவில் வியாபாரம் முடிந்ததும் வசூலான பணத்தை எண்ணி, கடை ஊழியரிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார் அமர்தலால். பின்னர், கடையை பூட்டி விட்டு சாவியை மட்டும் ஒரு பையில் போட்டு கொண்டு வீட்டுக்கு புறப்பட முற்பட்டார். அந்த நேரத்தில், பைக்கில் வந்த 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் அமர்தலாலின் பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அமர்தலால் அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து வியாபாரியிடம் ரூ.3.20 லட்சம், மிளகாய் வியாபாரியிடம் ரூ.6 லட்சம், மர்ம ஆசாமிகளால் பறித்து செல்லப்பட்டது. அந்த சம்பவங்களிலும் கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கவில்லை. தற்போது, பணத்தை ஊழியரிடம் கொடுத்து அனுப்பியதால் பல லட்சம் பணம் தப்பியது. தொடர் சம்பவம் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.