மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பறிமுதல்: சென்னையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது
6/9/2025 3:33:05 PM
மீனம்பாக்கம்: மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மிக பெரிய அளவில் போதை பொருட்கள், சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலால் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க துறை அதிகாரிகள், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 256 பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதில் சந்தேகப்பட்ட பயணிகளை சோதனையிட்டனர். அப்போது, ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஜோகன் (42) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் இந்தியாவுக்கு வந்து விட்டு மீண்டும் அபுதாபிக்கு செல்ல வந்திருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை நிறுத்தி, உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். ஏராளமான மாத்திரைகள் அடங்கிய பாக்கெட் மற்றும் பால் பவுடர் டின்கள் வைத்திருந்தார். உடனே அந்த மாத்திரைகளை எடுத்து அதிகாரிகள் பார்த்தனர். அப்போது, ‘இது சத்து மாத்திரை என்றும், பால் பவுடர் மிகவும் உயர் ரகமானது. எனவே இங்கிருந்து வாங்கி செல்கிறேன்’ என்றும் ஜோகன் கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே மாத்திரைகளை ஆய்வு செய்தபோது, ஹெராயின் போதை பொருள் கலந்த மாத்திரை என்பதும் பால் பவுடரை ஆய்வு செய்தபோது, மேல் பகுதியில் பால் பவுடரும், கீழ் பகுதியில் ஹெராயின் போதை பொருளும் கலந்திருப்பதும் தெரிந்தது. மொத்த எடை 12 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள், ஜோகனை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஜோகன், சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர். ஏற்கனவே போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மீண்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னைக்கு எப்போது வந்தார், எங்கு தங்கினார், போதை பொருளை இவரிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமிகள் யார், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த வேறு யாரெல்லாம் சென்னையில் இருக்கிறார்கள் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிக்கியது ெஹராயின்தானா அல்லது மிகவும் விலை உயர்ந்த வீரியமான போதை கொடுக்க கூடிய கொகைன் வகையை சேர்ந்ததா என்பது பற்றி உறுதி செய்வதற்காக கைப்பற்றிய போதை பொருட்களை ரசாயன கூடத்துக்கு அனுப்பியுள்ளனர். கொகைனாக இருந்தால் இந்த போதை பொருளின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் சமீப காலத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் கடத்துதல் மற்றும் போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ரூ.20 கோடி போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.