ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் லாபம் 4 கோடி
6/7/2025 4:06:04 PM
ஐதராபாத்: தெலங்கானாவில் ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தி வரும் பெட்ரோல் பங்க்கில் ரூ.4 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.தெலங்கானா மாநிலத்திலுள்ள சன்சல்குடா பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளின் பெயரில் ஒப்பந்தம் போட்ட சிறைத்துறை, அந்த பங்க் நிர்வாகம் முழுவதையும் அவர்களிடமே ஒப்படைத்தது. இதையடுத்து ஆயுள் தண்டனை கைதிகள் பங்க்கை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினத்தோடு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
இந்த பங்க்கில் 45 ஆயுள் தண்டனை கைதிகளும், சிறையிலிருந்து விடுதலையான 16 பேரும் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 12,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்கள் நன்னடத்தை, ஏழ்மையான குடும்ப சூழல் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பெட்ரோல் பங்க்கில் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பங்க் சிறைக்கு வெளியில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு, பணி புரியும் கைதிகளில் யாரும், இதுவரை தப்பித்துச் செல்ல முயற்சிக்கவில்லை. தவிர பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவு ம் இது வரை ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை. கைதிகளால் நடத்தப்படும் சன்சல்குடா பெட்ரோல் நிலையம் நாள்தோறும், 28,000 முதல் 30,000 லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் அதிகம் பெட்ரோல் விற்பனை நடைபெறும் பங்க்குகளில் முதலிடத்தில் இருக்கிறது.
தற்போது கைதிகளுக்கு தினசரி ரூ.110 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இனி இந்தத் தொகை ரூ.250 ஆக அதிகரிக்கச் சிறைச்சாலைகளின் இயக்குநர் சிங், மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் ஆண்டுதோறும் இந்த பெட்ரோல் பங்க்கில் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுகிறது. இதன்மூலம் சுமார் 4 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்தத் தொகை, தெலங்கானா சிறைத்துறை மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெலங்கானா சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.