கவர்னரை தொகுதிக்குள் விடாதீர்கள் - நாராயணசாமி முதல்வர் வெற்றுக் கூச்சல் போடுகிறார் - கிரண்பேடி: புதுச்சேரியில் உச்சகட்ட மோதல்
6/6/2025 4:03:55 PM
புதுச்சேரி: புதுவையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. தொகுதிக்குள் கவர்னரை நுழைய விடாதீர்கள் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த கவர்னர் கிரண்பேடி, முதல்வர் வெற்றுக் கூச்சல் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் காங்கிரஸ் அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே நீடித்த பனிப்போர் நகராட்சி ஆணையர் சந்திரசேகர் இடமாற்றல் விவகாரத்தில் வெட்டவெளிச்சமானது. கவர்னரும், முதல்வரும் நேரடியான விமர்சனங்களில் ஈடுபட்டனர். இதனிடையே சென்டாக் முதுநிலை மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டார். இப்பிரச்னை பூதாகரமாக வெடித்தது. ஆட்சி நிர்வாகத்தில் கவர்னர் எல்லைமீறி தலையிடுவதாக குற்றச்சாட்டை ஆளுங்கட்சி தரப்பினர் முன்வைத்தனர். கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுப்பினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டிவிட்டரில் முதல்வருக்கு 32 கேள்விகளை கவர்னர் கிரண்பேடி எழுப்பி இருந்தார். அதில் தான் சிறந்த நிர்வாகியாக இல்லாமல் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென முதல்வர் விரும்புகிறாரா? என்று கேட்டிருந்தார். இதையடுத்து, ஆட்சியாளர்களின் அனுமதியின்றி கவர்னரை அதிகாரிகள் சந்திக்க தடைவிதித்த முதல்வர், தொகுதிக்குள் கவர்னரை நுழைய விடாதீர்கள் என்று எம்எல்ஏக்களை வலியுறுத்தினார். கவர்னர் எல்லை மீறி செயல்பட்டால் அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதற்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் தடாலடியாக பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது வாட்ஸ் அப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முதல்வர் நாராயணசாமி வெற்றுக் கூச்சல் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை ஒருபோதும் தான் பொருட்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ள கவர்னர், அதிகரித்துவரும் கூச்சலால் பணியிலிருந்து பின்வாங்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் திணறி வருகின்றனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் எங்கள் நிலைமை உள்ளது என அவர்கள் புலம்பி வருகின்றனர்.