3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு
6/6/2025 4:02:27 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சிந்து (32), டாக்டர். இவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றினர். 2011ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, நாமக்கல் முல்லைநகர் ஹவுசிங்போர்டில் உள்ள தனது வீட்டில் டாக்டர் சிந்து, தாய் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68) ஆகியோருடன் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்து, டாக்டர் சிந்து உள்ளிட்ட 3 பேரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, வீட்டிலிருந்த 28 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து சென்னை சந்தானம் (28), வாணியம்பாடி காமராஜ் (33), பரமத்திவேலூர் இளங்கோ(27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே கரூர் மாவட்டத்தில், மேலும் 3 பெண்களை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் சந்தானம் உள்ளிட்ட 3 பேரும் கைதாகினர். இதை விசாரித்த கரூர் மாவட்ட நீதிமன்றம், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சந்தானம், கடந்த 2014ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறையில் இறந்து விட்டார். இதையடுத்து காமராஜ், இளங்கோ இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், அளித்த தீர்ப்பில் காமராஜ், இளங்கோ ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.