தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை
6/6/2025 4:00:59 PM
தஞ்சை: தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தஞ்சை: வடக்கு வாசல் ஏஒய்ஏ நாடார் சாலையில் இன்று புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் வடக்கு வாசல் நான்கு சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் தங்க பிரபாகரன் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் போக்குவரத்து பாதித்தது.
திருவாரூர்: முத்துப்பேட்டை அடுத்த தேவதானம் ஒட்டங்காடு மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த மே 14ம் தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஜூன் 1ம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றிக்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அன்றும் கடை அகற்றப்படாததால், கிராம மக்கள் பேராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். நேற்று 5வது நாளாக முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் கடை திறக்கப்படவில்லை. தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
நாகை: கொள்ளிடம் அடுத்த புத்தூரில் ரயில்பாதை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், புத்தூரில் ஒரு டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், டாஸ்மாக் எதிர்ப்புக் குழுத்தலைவர் சிவக்குமார் தலைமையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க தலைவர் செந்தில், பாரதி, முரளி உள்ளிட்ட 14 பேர் நேற்று டாஸ்மாக் கடையை நோக்கி முற்றுகையிட கோஷமிட்டபடி சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.