காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் துவக்கம்: 8ம் தேதி கருடசேவை
6/6/2025 3:47:12 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு செல்வர் உற்சவம், அங்குரார்பணம், முதன்மையார் புறப்பாடு, ஆழ்வார் திருநாள், சிறுபுண்ணியக்கோட்டி விமானம் உள்ளிட்டவை நடந்தது. தினமும் காலையில் அம்ச வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், தங்க பல்லக்கு, தங்க சப்பரம், திருத்தேர் உற்சவம், தொட்டி திருமஞ்சணம், தீர்த்தவாரி, த்வாத ஆராதனம் உள்ளிட்ட வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சிம்மவாகனம், சூர்யபிரபை, அனுமந்த வாகனம், சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விஜயன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.