தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு
6/5/2025 3:35:06 PM
புதுடெல்லி: தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரத்தை சிபிஎஸ்இ யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும், சீருடை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. மேலும் பல்வேறு காரணங்களை கூறி மறைமுக கட்டணங்கள், நன்கொடை உள்ளிட்டவற்றையும் தனியார் பள்ளிகள் கறக்கின்றன. எனவே இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த ஆண்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விபரத்தை சிபிஎஸ்இ யிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சீருடை மற்றும் பாட புத்தகங்களை விற்பனை செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஜ் ஜவடேகர் அளித்த பேட்டியில், தேவையில்லாத கட்டணங்களை தனியார் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம். மறைமுக கட்டணங்கள் வசூலித்துள்ளது தெரியவந்தால் அவற்றை மீண்டும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மறைமுக கட்டணங்கள், தேவையில்லாத நன்கொடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விபரத்தை சிபிஎஸ்இயிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளும் அனுப்பி வைத்துள்ள கட்டண பட்டியல் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கட்டண பட்டியலை அனுப்பாத பள்ளிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பட்டியல் அனுப்பாத மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் கட்டணங்களை நிர்ணயிக்க பள்ளிகள் விரும்பினால் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகி உரிய அனுமதி பெறப்பட வேண்டும். குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் சட்ட மசோதாவை பல்வேறு மாநிலங்களும் கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ன.
இந்த மசோதாவின்படி பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வர சுயநிதி வகுப்புகளுக்கு வசூலித்து கொள்வதற்கு தொடர்பாக விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ன. தற்போது இந்த சட்டத்தை மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விரும்புவதால், மசோதாவின் நகலை அனுப்பி வைக்கும் படி குஜராத் கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசாமாவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் படி குஜராத்தில் உள்ள பள்ளிகள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி, ரூ.250, ரூ.2500, ரூ.25000, ரூ.2.5 லட்சம் வரை பல்வேறு தரத்தில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கல்விதுறையில் தனியார் முதலீடுகள் வளர்ச்சிக்கு உதவும் என்பது உண்மைதான். அதற்காக பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.