பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியதால் சேதம்
6/5/2025 3:29:41 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியது. இதனால் ஸ்கேனர் சேதமடைந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் சத்யதேவ் பச்சவுரி. ஹர்டோய் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சத்யதேவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு லக்னோவில் உள்ள அரசு மருத்துவனையான ராம் மனோகர் லோகியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சத்யதேவை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனை ஊழியரக்ள் அங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேனர் அறைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரி தன்னுடன் கொண்டு வந்த குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை உள்ளே கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அதை வெளியில் வைத்து செல்லங்கள் என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த அதிகாரி அதை கேட்காமல் அவர்களுடன் வாக்குவாதம் செய்து விட்டு ஸ்கேனர் அறைக்குள் நுழைந்து சத்யதேவை படுக்கையில் படுக்க வைத்துள்ளார். அப்போது துப்பாக்கி நழுவி ஸ்கேனரில் உள்ள மின்காந்தத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளே சிக்கியது. இதனால் ஸ்கேனர் செயல்பட முடியாமல் பழுதடைந்தது. இந்த ஸ்கேனரின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.5 கோடி என தெரியவந்துள்ளது. தற்போது பழுது நீக்குவதற்கு மட்டும் ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்கேனர் பழுதானதால் அடுத்து வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.