தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது
6/4/2025 3:09:09 PM
சென்னை: தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி அதிரடியாக 3 நாள் சுற்றுபயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி நேற்று மதியம் சென்னை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதை தொடர்ந்து ராகுல் காந்தி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து வைரவிழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, ேகாடிக்கணக்கான தமிழக மக்கள் கருணாநிதியை நேசிப்பதால் அவர் ேதால்வியே கண்டதில்லை என்று புகழாரம் சூட்டினார். இதை தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய பாஜ அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், தேசிய அளவிலான அரசியலில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு நிகழ்ச்சியை முடித்து விட்டு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ராகுல்காந்தி தங்கினார். அவர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல் காந்தி வருவதால் சென்னை முழுவதும் அவரை வரவேற்று பிரம்மாண்டமான பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.
ராகுல் காந்தி வருகையை யொட்டி சத்திய மூர்த்தி பவன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மத்திய பாதுகாப்பு படை பிரிவினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வந்த அவருக்கு காங்கிரசார் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வளாகத்தில் உள்ள காமராஜர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதை தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார். பின்னர் சத்திய மூர்த்தி பவன் கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி நூற்றாண்டு நினைவு நூலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்தார். பின்னர் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 268 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கான பாஸும் அளிக்கப்பட்டிருந்தது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் ராகுல்காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை உருவாக்குவது குறித்தும் அறிவுறுத்தினார். கட்சியில் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற முடியும். கட்சிக் கட்டுப்பாட்டை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கூட்டத்திற்குப் பிறகு அவர், சத்தியமூர்த்தி பவனில் இருந்து காரில் சென்னை விமானநிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக லீ மெரிடியன் ஓட்டலில் காலை 9.30 மணியளவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் 8 எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். புதுவை முதல்வர் நாராயணசாமியும் ராகுலை சந்தித்து பேசினார். அப்போது புதுவை ஆட்சியில் கவர்னரின் தலையீடு குறித்து அவர்கள் ஆேலாசனை நடத்தினர்.