பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு
6/3/2025 5:15:39 PM
செய்யூர்: மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதியதில் சிறுமி உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று காலை 6 மணியளவில் அரசு பஸ் (த.எண்.டி-1) சென்று கொண்டிருந்தது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுராந்தகம் அருகே அத்திமணம் தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென பிரேக் டவுன் ஆனதால் பஸ்சை சாலையோரமாக டிரைவர் நிறுத்தினார். இதில் வந்த பயணிகள், மாற்று பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பழுதாகி நின்றிருந்த அந்த பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. இதில் பஸ், வேகமாக முன்னோக்கி சென்றதில் அங்கு சாலையில் மாற்று பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது ஏறி இறங்கியது. திருவண்ணாமலை குலவை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (50), மதுராந்தகம் அரும்புலியூரை சேர்ந்த இலக்கியா (12) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனையில் மதுராந்தகத்தை சேர்ந்த மேரிலில்லி (36) சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடைபெற்றதும் மணல் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 2 பேரின் சடலத்தையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.