புகை மண்டலமாக காட்சி அளிக்கும் தி.நகர்: சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் பாதிப்பு: நுரையிரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்
6/1/2025 3:57:32 PM
சென்னை: தி.நகர் சென்னை சில்க்சில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்ந்து 2வது நாளாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு துறையினர் எவ்வளவு முயன்றும் கொளுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. வடக்கு உஸ்மான் சாலை, பர்கிட் சாலை, பாண்டிபஜார், உள்பட சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், இன்று காலை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் இங்கு முகாமிட்டு தீயை எவ்வாறு அணைக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.
தி.நகரின் நாலா புறமும் 4 கி.மீட்டருக்கும் மேலாக புகை வாடை கடுமையாக வீசுகிறது. இப்பகுதி மக்கள் ஏற்கனவே காலிசெய்யப்பட்டுள்ள நிலையில், இருக்கும் மக்களும் புகை வாடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டோர், வயதானோர், பெண்கள், சிறுவர்கள் உள்பட பலதரப்பினரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது போன்று நகரின் முக்கிய பகுதியில் கட்டடத்தை கட்டும் போது, எத்தனை மாடி கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது உள்பட அனைத்து விஷயங்களையும் அவ்வபோது ஆராய வேண்டும். தற்போது சென்னை சில்க்சில் தீ பற்றி எரிந்து வருவதால், இந்த கடையை பற்றி பேசி வருகிறோம். இது போன்ற கட்டுமான அமைப்புடன் தி.நகரில் பெரிய கடைகள் ஏராளமாக உள்ளன. அவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது : கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணம் கருதி இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசு தெரிவித்துள்ளது. இருக்கும் வீட்டை விட்டு விட்டு எங்கு செல்வது என்றே தெரியவில்லை. இது போன்று தொடர்ந்து புகை வெளியேறிக் கொண்டே இருப்பதால், சுவாசக் கோளாறு, நுரையீரல் கோளாறு, மூச்சு திணறல் உள்பட பல நோய்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. சுற்றுவட்டாரங்களில் 5 கி.மீட்டர் வரை இந்த புகையின் வாடை வீசுகிறது. சென்னை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் ஏராளமான பெரிய பெரிய கட்டங்கள் புதிது புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
சாதாரணமாக ஒரு பெரிய கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அங்கு பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் அளவுக்கு காற்றோட்டமான சூழல் இருக்க வேண்டும். ஆனால் இவை எதையும் அதிகாரிகள் பார்ப்பதே கிடையாது. தி.நகரில் இருக்கும் எந்த கட்டடத்துக்கும் பார்க்கிங் வசதி என்பதே கிடையாது. தற்போது சென்னை சில்க்சில் ஏற்பட்ட இந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைத்து பெரிய கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். எங்கு விதிமீறி நடந்திருக்கிறதோ அந்த கட்டடத்துக்கு நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் விபத்து ஏற்படும் போது அமைச்சர்கள் வந்து “ கண்டிப்பாக தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்களது சுயவிளம்பரத்தை தேடிக் கொள்கிறார்களே தவிர எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. எனவே இனியாவது பணிகள் நடக்க வேண்டும், லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ஆவேசமாக தெரிவித்தனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தொடங்கியதும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் ஆஜரானார். அப்போது அவர், ‘’சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஏற்கனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. அதனால், தான் தீயணைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
எனவே இந்த விதிமீறல் கட்டிடத்தை கட்ட அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட தமிழக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘’ இதை மனுவாக தாக்கல் செய்யுங்கள். வழக்கில் விசாரிக்கிறோம்’’ என்றனர்.