ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க நிதி ஆயோக் பரிந்துரை
5/31/2017 3:34:57 PM
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுனத்திற்கு விற்பதற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.பிரதமர் அலுவலகத்திற்கு நிதி ஆயோக் அனுப்பிய பரிந்துரையில் தேசிய போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை முழுமையாக தனியார் மயப்படுத்தி விடலாம் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியாவை மீட்க அதன் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம் என்றும் அதில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவது குறித்து அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் நிதியை வலுவாக்க நிதி ஆயோக் பரிந்துரை அனுப்பியுள்ளது. இதை செயல்படுத்துவது குறித்து அனைத்து வழிகளிலும் ஆராயப்பட்டு வருகின்றன என்றார்.
ஏர் இந்தியா நிறுவனத்திடம் 114 விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை போயிங் மற்றும் ஏர்பஸ் ரகங்கள் ஆகும். ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2015-16ல் லாபம் ரூ.106 கோடியாக காணப்பட்ட நிலையில் 2016-17ல் ரூ.300 கோடியாக உயர்ந்தது. இருந்த போதிலும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை ஆண்டு தோறும் அதிகரித்து வந்துள்ளது. இதன் மொத்த கடன் ரூ.50 ஆயிரம் கோடியாக எகிறியுள்ளது. இந்த சூழலில் கடந்த மத்திய பட்ஜெட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைப்பதற்காக ரூ.1800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி நிதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட போதிலும் இதன் மூலமான லாபத்தை ஏர் இந்தியா திரும்ப பெற பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
விமான பயணிகளில் சுமார் 14 சதவீதம் பேர் மட்டுமே ஏர் இந்தியா சேவையை பயன்படுத்துகின்றனர். எனவே இதை மேம்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இணை அமைச்சர் மனோஜ் சின்கா நேற்று தெரிவித்தார்.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி நிலைமையை சரி செய்ய அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் தற்போது நிதி ஆயோக்கும் இது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.