மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை வெறிச்சோடியது அந்தியூர் கால்நடை சந்தை
5/29/2017 2:49:49 PM
அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சந்தையில் நாட்டுமாடுகள், ஜெர்சியின மாடுகள், எருமைகள், பர்கூர் செம்மறை மாடுகள் என பலவகை மாடுகள் விற்ப்பனைக்கு வரும். இவைகள் வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் வாங்கிச் செல்லப்படும். மத்திய அரசு தற்போது இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்ததையடுத்து கேரளா, கோவை வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வரவில்லை. இதனால் இறைச்சிக்காக விற்கப்படும் காளை மாடுகள், கன்றுக்குட்டிகள் வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் திரும்ப கொண்டு செல்லும் நிலை காணப்பட்டது.
இதனால் சந்தை வெறிச்சோடியது. மேலும் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படும் அடி மாடுகள் ஆயிரம் ரூபாய்க்குகூட வாங்க நேற்று ஆளில்லை. கன்றுக்குட்டிகள் மட்டுமே குறைந்தளவு விற்கப்பட்டு வேன்களில் கொண்டு செல்லப்பட்டது. சந்தை நிர்வாகிகள் கூறுகையில், மத்திய அரசு தடை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளை வாங்கி சென்றால் வழியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினால் இழப்பு ஏற்படும் என்பதால் வியாபாரிகள் யாரும் வரவில்லை என்றனர்.