திருப்போரூர்-செங்கல்பட்டு இடையே வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் திணறல்
5/18/2017 4:05:30 PM
திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து சுமார் 27 கிமீ தூரத்தில் செங்கல்பட்டு உள்ளது. இந்த 2 ஊர்களை இணைக்கும் சாலையை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் பல இடங்களில் கிராமங்களின் பெயர், செல்ல வேண்டிய தூரம், வனப்பகுதி எச்சரிக்கை, வேகத்தடை, சாலைகள் சந்திப்பு எச்சரிக்கை, குறைவான வேகம் செல்ல வேண்டிய பகுதி போன்ற வழிகாட்டி பலகைகள் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த பலகைகள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடப்பட்டுவிட்டது. இதனால் இரும்பு தூண்கள் மட்டும் நிற்கின்றன. வழிகாட்டி பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும் என்றும் இந்த முறை மர்ம நபர்கள் திருடிச்செல்லாத வகையில் வெல்டிங் மூலம் இணைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.