அமைச்சராக இருந்த 6 ஆண்டு காலத்தில் ஓபிஎஸ் முறைகேடு பட்டியல் தயாரிக்க எடப்பாடி உத்தரவு
5/2/2025 2:53:31 PM
சென்னை: துறைவாரியாக தகவல் சேகரிப்பால் பரபரப்பு ஓபிஎஸ் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தபோது நடைபெற்ற முறைகேடுகள் குறித்த பட்டியலை தயாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் துறை வாரியாக பட்டியல் தயாராகி வருகிறது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பி.எஸ். அணி, முதல்வர் எடப்பாடி அணி என்று செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஓ.பி.எஸ். அணி விதித்த நிபந்தனைகளை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை.
அது மட்டுமல்லாமல் எடப்பாடி அணியில் ஓ.பி.எஸ்.சை சேர்க்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இரு அணிகள் இணைப்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி “எங்களுக்கு 122 எம்எல்ஏக்கள், 29 மக்களவை உறுப்பினர்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள், 50 மாவட்ட செயலாளர்களில் 48 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு உள்ளிட்ட 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு என அனைத்து தரப்பிலும் எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு உள்ளது” என்றார்.
முதல்வர் இப்படி பேசியதால் இரண்டு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், இரு அணிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு வடசென்னையில் நடந்த ஓ.பி.எஸ்.அணியின் மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ். “ எடப்பாடி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபடநாடகம் ஆடுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி டி.டி.வி.தினகரனின் கூட்டாளி” என்று கடுமையாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். ஏற்கனவே, இரட்டைஇலை சின்னத்தை பெற பணம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டி.டி.வி. தினகரனின் கூட்டாளி என்று எடப்பாடியை ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
இதனால், எடப்பாடியை வழக்கில் சிக்க வைக்க ஓ.பி.எஸ். மறைமுகமாக முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு ஓ.பி.எஸ். பேசியது ஆளுங்கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லை வீச ஓ.பி.எஸ். பார்க்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வருகிற 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி குறித்து குற்றச்சாட்டுக்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தால், பதிலடி கொடுக்க எடப்பாடியும் தயாராகி வருகிறார்.
இதற்காக ஓபிஎஸ் கடந்த 6 ஆண்டுகளாக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது என்னென்ன தவறு செய்தார். துறையில் என்னென்ன முறைகேடு நடந்தது. சேகர் ரெட்டிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? கிரானைட் முறைகேடுகள், தாதுமணல் முறைகேட்டில் அவருக்கு பங்கு உள்ளதா? அதில் விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட அனுமதிகள், சலுகைகள் குறித்தும் தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்பு நாதனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கவும் எடப்பாடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்த தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதா ஓ.பி.எஸ்.சிடம் நடத்திய விசாரணை தொடர்பான தகவலையும் திரட்ட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஓ.பி.எஸ். மீதான குற்றங்களை சேகரிக்கும் பணியில் அவரது ஆதரவாளர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி தான் மோதி வந்தது. தற்போது, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் நேரடியாக மோதலாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.