எவ்வளவு கடினமான இலக்கையும் எங்களால் ‘சேஸ்’ செய்ய முடியும் கொல்கத்தா கேப்டன் கம்பீர் நம்பிக்கை
4/27/2017 2:51:43 PM
புனே: ஐபிஎல் டி20 தொடரில், புனேவில் நேற்று இரவு நடந்த, 30வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த புனே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 51 (37 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ரஹானே 46 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 2, உமேஷ் யாதவ், பியூஸ் சாவ்லா, சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா 87 (47 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), கம்பீர் 62 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜெயதேவ் உனத்காட், டேனியல் கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உத்தப்பா ஆட்ட நாயகன் விருது வென்றார். இரு அணிகளுக்கும் இது 8வது போட்டியாகும். கொல்கத்தா 6வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புனே 4வது தோல்வியை சந்தித்தது.
வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘நாங்கள் ‘சேஸ்’ செய்வதில் வலுவான அணியாக உள்ளோம். எங்களால் எந்த இலக்கையும் ‘சேஸ்’ செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அணியின் வெற்றியில் தொடர்ந்து எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி. எங்கள் அணியின் அனைத்து ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசினர். எங்களுக்கான போட்டி அட்டவணை ‘பிஸியாக’ உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு (28ம் தேதி) டெல்லியுடன் மோதவுள்ளோம். இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைல் விளையாட வேண்டும் (புனேவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது) என விரும்புகிறோம்’ என்றார்.
புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘உத்தப்பா, கம்பீர் அழகாக பேட்டிங் செய்தனர். சில கேட்ச்சுகளை தவற விட்டு விட்டோம். அவை விலை மதிப்பில்லாதவை என்பது நிரூபணமாகி விட்டது. தொடர்ச்சியாக இதே தவறை செய்கிறோம். எங்களின் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. காயம் காரணமாக இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது இழப்பு’ என்றார்.
* குல்தீப் யாதவ் வீசிய 18வது ஓவரில் டோனி (23 ரன்), மனோஜ் திவாரி (1 ரன்) ஆகியோர் விக்கெட் கீப்பர் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டனர். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 2 பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்த 2வது பவுலர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார். முன்னதாக இதனை கடந்த 2009ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அமித் மிஸ்ரா செய்துள்ளார்.
* புனே அணியின் முதல் விக்கெட்டிற்கு ரஹானே-திரிபாதி ஜோடி 65 ரன் சேர்த்தது. தங்களின் சொந்த மைதானமான எம்சிஏ மைதானத்தில் இதுவரை விளையாடியுள்ள 8 இன்னிங்சுகளில் இதுதான் புனே அணி முதல் விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.