திருமண ஆசைக்காட்டி மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை
4/19/2017 3:03:28 PM
ஆவடி- திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையை சேர்ந்த 22 வயது பெண் மாற்றுத் திறனாளி. கடந்த சில வருடங்களுக்கு முன் இவருக்கும் சென்னை, அரும்பாக்கம், காந்தி நகர், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சுந்தர்ராஜன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, சுந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நேற்று மாலை அம்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.‘’மாற்றுத் திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற சுந்தர்ராஜனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால், மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என்று நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார்.