அரசு ஊழியருக்கு சரமாரி வெட்டு: திருமுல்லைவாயலில் பரபரப்பு
4/19/2017 3:02:55 PM
ஆவடி- ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சிவலிங்கம் (60). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பைக்கில் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து மகள் லட்சுமியை அழைத்துவர சென்றார்.
திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் சென்றபோது, அவரது பைக்கை 2 பேர் வழிமறித்தனர். திடீரென சிவலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, முகத்தில் பலத்த வெட்டு காயம் அடைந்து ரோட்டில் துடித்தார். அவர் இறந்துவிட்டார் என்று கருதி 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ரோட்டில் துடித்துக்கொண்டிருந்த சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவலிங்கத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, சிவலிங்கத்தை வெட்டிய 2 பேர் யார், என்ன காரணம் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.