நியூஸ் ரூம்
4/19/2017 2:14:04 PM
‘மழைச்சோறு’ பிரார்த்தனை
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய மதுரை மாவட்டம் மேலவளவு ராசினாம்பட்டி கிராம மக்கள் முடிவு செய்தனர். தங்களது பாரம்பரிய முறைப்படி மேலவளவு சோமகிரி மலை அழகுநாச்சி அம்மன் கோயிலில் திரண்ட பெண்கள் கும்மியடித்தனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பொங்கல் வைத்து அனைத்து மக்களுக்கும் வழங்கி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து மேலூர் வர்த்தகர் சங்கத்தினர் கிராம மக்களுடன் இணைந்து மழை வேண்டி மழைச்சோறு சாப்பிட்டு, பிரார்த்தனை செய்தனர். கடும் வறட்சி காலங்களில் முன்னோர்கள் தெரு தெருவாக சென்று வீடுகளில் மண்பானைகளில் சோற்றை பெற்று வருவார்கள். பின்னர் அதை வைத்து கூட்டு வழிபாடு செய்து அனைவரும் பகிர்ந்து உண்பார்கள். அதே முறையில் நேற்று வர்த்தகர் சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வீடு வீடாக சென்று பெற்ற சாதத்தை, கூட்டு பிரார்த்தனைக்கு பிறகு அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
டெங்கு பரவும் கிராமம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் ஊராட்சியில் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, ஆவுடையாப்பட்டினம், ஆயிபட்டினம் ஆகிய இடங்களில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைகள் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகி 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் திருச்சி, மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டித்து அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், அம்மாபட்டினத்தில் உடனடியாக துப்புரவு ஊழியர்களைக் கொண்டு குப்பைகள், கழிவுநீர் அகற்றி கிருமி நாசினி தெளிக்கப்படும். சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
‘சடலம்’ மனு கொடுக்கும் போராட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சியை சேர்ந்த விவசாயி தங்க சண்முகசுந்தரம், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திங்கள்கிழமைதோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் நூதன போராட்டம் நடத்தி வருகிறார். அதேபோல பிற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தார். பின் சடலம் போல் படுத்து கொண்டு மனுநீதி சோழனிடம் மணியடித்து மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தினார். திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் விஸ்வேசர் என்பவரை மனுநீதி சோழன் மன்னன் போல் வேடம் அணிய வைத்து தங்க சண்முகசுந்தரம் சடலம் போல் படுத்து கொண்டு மனு கொடுத்தார். அவரது மனுவில், ‘மனு கொடுத்து மரித்துபோன விவசாயினுடைய கண்ணீர் மனு இது. பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க வேண்டும். பிணத்தின் மேல் ஆட்சி செய்ய நினைத்தால் முதலில் விவசாயிகளை சுட்டு கருணை கொலை செய்துவிடுங்கள். கடனாலும், வறுமையாலும் சாவதை காட்டிலும் ஒரேயடியாக சுட்டுக்கொல்லுங்கள்’ எனக்கூறப்பட்டுள்ளது.
சமூகப் பெண் போராளி
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா(38), ஜல்லிக்கட்டு, வைகை அணையை தூர்வாரக் கோருதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியவர். மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக நேற்று கரூர் வந்தார். வரப்பாளையம் மணல் குவாரியை நோக்கி போராட்டம் நடத்த தனியாக வந்து கொண்டிருந்த அவரை வாங்கல் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். ஒரு பஸ்சை கொண்டு வந்திருந்த போலீசார் அதில் அவரை ஏற்றி போலீஸ் நிலையம்கொண்டு சென்றனர். நர்மதா கூறுகையில், தமிழக அரசு பல இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இதற்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறது. தற்போது ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் முறைகேடு நடக்கிறது. தனியார் பயன்பெற்று வருகின்றனர். மணல் கொள்ளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குவாரி மற்றும் விற்பனை நிலையம் முன்பாக போராட்டம் நடத்துவதற்காகவும் இங்கு வந்தேன். ஆனால் வழியிலேயே போலீசார் கைது செய்துவிட்டனர். தமிழகம் முழுவதும் தமிழக அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி அரசுக்கு கிடைக்கும். எனவே, நேரடியாக அரசே குவாரிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
பேச்சில்லாமல் வேலை
திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ பிரிவுக்கு பதவி உயர்வு வழங்கிய நிலையில் பி, சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பி.எப். நிறுவனத்தை மத்திய அரசிலிருந்து மாநில அரசிற்கு கொடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் ஆகிய 2 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த மவுன போராட்டத்தில் கலந்து கொண்ட 110 தொழிலாளர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டி நேற்று பணியில் ஈடுபட்டனர்.