அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை விசாரணை: சரத்குமார், ராதிகாவும் ஆஜர்
4/12/2025 5:35:05 PM
சென்னை- அமைச்சர் விஜய பாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் இன்று வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமாரிடமும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக விசாரணை நடத்துகின்றனர். ராதிகாவும் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வீடு, வீடாக கடந்த செவ்வாய்கிழமை இரவு பணம் விநியோகத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 7 அமைச்சர்கள் ரூ.89 கோடி பண விநியோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.
அதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். அப்போது விஜயபாஸ்கர், ராஜேந்திரனிடம் 5 மணி நேரமும், சரத்குமாரிடம் 8 மணி நேரமும் விசாரணை நடந்தது. இந்த விசாரணையைத் தொடர்ந்து ராதிகாவின் ராடன் டிவி அலுவலகத்தில் நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நடிகர் சரத்குமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அப்போது நடிகை ராதிகாவும் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு திடீரென்று சரத்குமார் ஆதரவு தெரிவித்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சரத்குமாரை தினகரன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பெரிய அளவில் பணம் கை மாறியிருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் சோதனை நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இருவரிடமும் இன்று விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீதாலட்சுமியிடம் விசாரணை :அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர் கீதாலட்சுமி. இவர் தற்போது எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ளார். இவரது சாலிகிராமம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்டன. சோதனைக்குப் பின் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கீதாலட்சுமிக்கு நோட்டீஸ் அளித்தது. ஆனால் அவர் ஆஜராகாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததோடு அவருக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தனர். இதனால் இன்று காலை 11 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கீதாலட்சுமி வந்தார். நேராக அதிகாரிகளின் அறைக்குச் சென்றார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.