பணப்பட்டுவாடா செய்த முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
4/12/2025 5:34:26 PM
சென்னை- ஆர்கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடுகள், அமைச்சரின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை துரைமுருகன், திமுக எம்பிக்கள் ஆகியோர் கவர்னரிடம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா மறைந்ததையொட்டி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதல், ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினரை தேர்வு செய்யும் பொருட்டு, ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் மறைவின் விளைவாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அதிமுக (புரட்சி தலைவி அம்மா) என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், அதிமுக (அம்மா) என டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இந்த இரண்டு அணிகளும் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தின. அதில் அதிமுக (அம்மா) அணிக்கு ‘தொப்பி’ சின்னத்தையும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணிக்கு ‘மின் கம்பம்’ சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர்களும், பெரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரனின் தலைமையின் கீழ் உள்ள அதிமுக (அம்மா) அணியை சார்ந்தவர்கள் என்பது அனைவரும் நன்கு அறிந்தது மட்டுமின்றி, ஊடகங்களிலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டது. ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் சார்பாக டிடிவி தினகரன் நிறுத்தப்பட்டு, அவர் பிப்ரவரி 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார். தன்னுடைய கைப்பாவைகளான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களோடு சேர்ந்து, குறிப்பாக விஜயபாஸ்கருடன் கைகோர்த்துக்கொண்டு, தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருட்டு, ஊழல் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, இந்திய தண்டனைச் சட்டப்படி சதி குற்றத்தில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார். டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து வீதி வீதியாக, வீடு வீடாக சென்று ஒரு வாக்காளருக்கு 10,000 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என்றும், விளக்குகள், புடவைகள், வேட்டிகள், பால் டோக்கன்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் அவரின் கட்சியில் உள்ள தேர்தல் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணத்தினை எடுத்துச்செல்ல காவல்துறை வாகனங்கள், சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மகிழுந்துகள் போன்ற மாநிலத்தின் நிர்வாக இயந்திரங்களை இவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் மூலம், நம்பத்தகுந்த தகவல்கள் வெளியே வந்திருக்கின்றன. வருமான வரித்துறை சட்டம், 1961 பிரிவு 132ன் கீழ், விஜயபாஸ்கர் வீடு உட்பட சென்னையில் 21 இடங்களிலும், சென்னைக்கு வெளியே தமிழகத்தின் 11 இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு, ஆவணங்கள், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விஜயபாஸ்கருடன் சமக தலைவர் மற்றும் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி மற்றும் அதிமுக தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சம்பத், ராஜலட்சுமி, வெள்ளமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் ராஜ்ய சபா எம்.பி வைத்தியலிங்கம் பெயர்கள் இடம்பெற்றுள்ன. உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர்.
வருமானவரிச் சட்டம், 1961ன் பிரிவு 278டி மற்றும் 132ன் கீழ் நடைபெறும் வருமானவரிச் சோதனையின்போது கைப்பற்றப்படும் எந்தவொரு ஆவணமும், கணக்கு புத்தகமும், பொருளும், அந்த 132வது பிரிவின் உட்பிரிவு 4ன்படி “யாரிடமிருந்து கைப்பற்றப்படுகிறதோ, அவருக்கு சொந்தமாக கருதப்பட வேண்டும்” என்று சொல்கிறது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 171ன்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அபராதத்துடன் கூடிய ஒரு வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். விஜயபாஸ்கர் மற்றும் பிறரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி வருமானவரித்துறை அதிகாரிகளை விஜயபாஸ்கர் தடுக்க முனைந்தது தொலைக் காட்சிகளில் வெளியானது. அதோடு, அமைச்சர், வருமான வரித்துறையினரை தடுக்க தன் வீட்டின் முன் கட்சிக்காரர்களை நிறுத்தியதோடு, முக்கிய ஆவணங்களை அழிக்க முனைந்துள்ளார். உண்மையில், அதிகாரிகளினுடைய சோதனை நடைபெறும்போதே, அமைச்சரின் ஓட்டுநர் சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று காம்பவுன்டிற்கு வெளியே வீசியுள்ளார். அதை அங்கிருந்த கட்சியினர் உடனே எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் பல தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளது. விஜயபாஸ்கரின் தடைகளையெல்லாம் மீறி, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.5 கோடி பணத்தையும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை பணப்பட்டுவாடா செய்வதற்கு முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்ததற்கான முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட பொருள், பணம் உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலில் லஞ்சம் கொடுப்பதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு123(1)ன் கீழ் வரும் தேர்தல் முறைகேடுகளும் “வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது” என்ற அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம். இது மாதிரி குற்றங்களில் ஈடுபட்டு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் மேற்கண்ட சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டாலே மக்கள் பிரநிதித்துவச் சட்டப் பிரிவு 8(1)ன் கீழ் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பை சந்திப்பார்கள். எனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதற்கு ஆதாரங்கள் வெளிப்பட்டு, அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களாகவும் ஆகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச்சட்டப் பிரிவு 164(1)ன் படி, மாண்புமிகு கவர்னர் அவர்கள் தான் முதலமைச்சரை நியமிக்கிறார். அப்படி நியமிக்கப்படும் அமைச்சர்கள் ஆளுனர் அவர்களின் விருப்பம் தொடரும் வரைதான் பதவியில் நீடிக்க முடியும்.
ஆகவே தற்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்துள்ள குற்றம்சாட்டும் ஆதாரங்களின் மூலம் அவர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இருப்பதும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதும் மற்றும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்தல் குற்றங்கள் புரிந்திருப்பதும் தெரிய வருகிறது. இதன் மூலம், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும், அரசியலமைப்பின் அற நெறிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு தவறு இழைத்திருப்பதற்கான முகாந்திரம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிய வந்துள்ளது. எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சம்பத், ராஜலட்சுமி, வெள்ளமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரை உடனடியாக அழைத்து, அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று கவர்னரை கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில், அரசியலமைப்பின் மதிப்பையும், அற நெறிமுறைகளையும் பாதுகாக்கும் வகையில் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அதிமுக அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.