டெல்லியில் 23வது நாளாக நீடிப்பு: கைகால்களை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
4/5/2025 2:11:01 PM
திருச்சி- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 14ம் தேதி முதல் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்தது. அந்த மழையிலும் கலைந்து செல்லாமல் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 23வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இன்று தலையில் முக்காடு அணிந்தும், சாலையில் அங்கபிரதட்சணம் செய்தும், கைகால்களை கட்டிக்கொண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் உள்ளிட்டோர்விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் நெல்லை செந்தில் குமரவேல், கரூரை சேர்ந்த மாநில துணை தலைவர் கிட்டப்பா தலைமையில் 25 பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணன் தலைமையில் 15 பேர் இன்று ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘வங்கிகளில் கடன் வாங்கியதன் மூலம் மத்திய அரசு எங்களை வீதியில் நடக்க முடியாதபடி செய்துள்ளது. கை, கால்களை கட்டியும் போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாய பயிர்களை காப்பதற்காக கடன் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கைகால்களை அசைக்க முடியாதபடி செய்துள்ளது’’ என்றார்.
தமிழக எம்பிக்களிடம் கோரிக்கை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையில் சங்கத்தின் துணை தலைவர்கள் கிருஷ்ணன், கிட்டப்பா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி ராஜா, மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன், பாமக எம்பி அன்புமணி ஆகியோரை சந்தித்தனர். அப்போது இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில், தங்களது போராட்டம் குறித்து குரல் எழுப்புமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.