வேலூர் ஏர்போர்ட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்
3/22/2017 3:01:22 PM
வேலூர்-நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நாட்டில் கைவிடப்பட்ட 42 சிறிய விமான நிலையங்களை சீரமைத்து பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதில் தென்னகத்தில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் என 2 சிறிய விமான நிலையங்களும், வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையம் என 3 விமான நிலையங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. முதற்கட்டமாக சுமார் ₹7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது.
விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி கிடைத்த நிலையிலும், தமிழக அரசின் தடையில்லா சான்றுடன் கூடிய ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வேலூர் விமான நிலையம் சீரமைக்கும் பணி 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது. அவ்வப்போது இங்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் வேலூர் விமான நிலையம் திறப்பதற்கான பூர்வாங்க பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வந்த மத்திய விமான போக்குவரத்து இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமை செயலக அதிகாரிகளை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து, வேலூர் விமான நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி அளித்துள்ளனர்.இதுகுறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ வேலூர் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றுடன் கூடிய ஒப்புதல் கடிதத்தை தலைமை செயலக அதிகாரிகள் வழங்கினர். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.