மூன்றில் ஒரு பங்கிற்கு இன்னும் 5 பேரே தேவை; ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் பதவிக்கு ஆபத்து இல்லை - மேலும் பல எம்பிக்கள் தாவுகிறார்கள்
2/13/2017 2:04:05 PM
சென்னை- ஓபிஎஸ் ஆதரவு அதிமுக அணியில் தற்போது 12 எம்பிக்கள் உள்ளதால், மூன்றில் ஒரு பங்கை எட்ட இன்னும் 5 எம்பிக்களே தேவைப்படுகின்றன. மேலும் பலர் வருவதாக உறுதி கொடுத்திருப்பதால் அணிமாறிய எம்பிக்களின் பதவி தப்பும் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சி தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என 2 அணியாக உடைந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 9 மக்களவை எம்பிக்களும், 2 மாநிலங்களவை எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட சசிகலா புஷ்பாவும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் அணியில் எம்பிக்கள் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் அதிமுகவுக்கு 37 எம்பிக்கள், மாநிலங்களவைக்கு 13 எம்பிக்கள் என்று 50 எம்பிக்கள் உள்ளனர். ஒரு கட்சியில் இருந்து எம்பியோ, எம்எல்ஏவோ நீக்கப்பட்டால் மட்டுமே அவர் கட்சி சாராத உறுப்பினராக சபாநாயகர் அறிவிப்பார்.
அதே சமயம், ஒரு எம்பி தானாக விலகினால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் அவர் பதவி பறிபோகும். கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் மனு அளித்தால், உறுப்பினரின் பதவி பறிக்கப்படும். இதனால்தான் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலாக புகார் கொடுத்த சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அப்போதே அறிவித்தாலும், மாநிலங்களவைக்கு அவர் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பவில்லை. அவர் மாநிலங்களவையில் இப்போதும் அதிமுக உறுப்பினராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதே சமயம், ஒரு கட்சியில் உள்ள எம்பிக்களில் மூன்றில் ஒரு பங்கினர் விலகினால் அவர்கள் தனி அணியாக சபாநாயகரால் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களின் பதவிக்கு ஆபத்து இல்லை. தற்போது, மக்களவை அதிமுகவில் இருந்து 12 அல்லது 13 எம்பிக்கள் தனியாக பிரிந்து சென்றால் அவர்களது பதவி தப்பி விடும். தற்போது ஓபிஎஸ் அணியில் 9 எம்பிக்கள் உள்ளனர்.
மேலும் 3 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல, மாநிலங்களவை அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் தற்போது 2 எம்பிக்கள் உள்ளனர். இதனால் மொத்தமாக 17 எம்பிக்கள் இருந்தால் ஓபிஎஸ் அணியில் சேர்ந்த எம்பிக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகி விடும். இதன்மூலம், அந்த எம்பிக்களின் பதவிக்கு ஆபத்தில்லை. தனி அணியாக அங்கீகரிக்கப்படும். இதனால், சசிகலா ஆதரவில் உள்ள மேலும் பல எம்பிக்களை இழுக்கும் பணி வேகமாக நடக்கிறது. ஓபிஎஸ் அணிக்கு வருவதாக மேலும் நான்கைந்து பேர் வாக்குறுதி அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சசிகலாவே ஆட்சிக்கு வந்தாலும், டெல்லியைப் பொறுத்தவரை அதிமுக-1, அதிமுக-2 என்று இரு அணிகளும் அங்கீகரிக்கப்பட்டு விடும். நாடாளுமன்றத்தில் இவை தனித்து இயங்க சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தங்கள் அணியே உண்மையான அதிமுக என்று கூறி, கட்சியின் பொதுக்குழுவையும் பன்னீர்செல்வம் கூட்ட வாய்ப்புள்ளது.
அதில், தனக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதாக கூறி, ஆதரவு கோரலாம். இதன்பின்னர், நீதிமன்றம் சென்றுதான் யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிமுகவின் சட்டதிட்டங்களைப் பொறுத்தவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் பொதுச் செயலாளராக முடியும். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஆனால் சசிகலா ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டு 5 ஆண்டு ஆகவில்லை. வருகிற மார்ச் 30ம் தேதிக்குப் பிறகுதான் அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். அதுவரை அவர் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் இருப்பார்.
இதனால், ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருமே கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 1996ம் ஆண்டு இதேபோல ஜெயலலிதாவும், திருநாவுக்கரசரும் போட்டிபோட்டு அதிமுக பொதுக்குழுவை கூட்டினர். பின்னர் இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று நீதிமன்றம் சென்றனர். ‘‘ஜெயலலிதாவே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநாவுக்கரசர், பொதுக்குழு உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, ஜெயலலிதா தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக’’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.