அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள பீச் நட்சத்திர ஓட்டலில் எம்எல்ஏக்கள் கைகலப்பு; நீச்சல் குளத்தில் 5 பேர் மூழ்கியதால் பரபரப்பு
2/10/2025 5:49:55 PM
சென்னை- அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு ரிசார்ட்ஸ் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் சசிகலா ஆதரவாளர்கள் கடும் கெடுபிடி காட்டி வருவதால் எம்எல்ஏக்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பதவியை பிடிப்பதில் பன்னீர்செல்வம்-சசிகலாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்பத்தில் சசிகலாவை ஆதரித்து வந்த முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதன்தொடர்ச்சியாக அதிமுகவில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. இதனால் சசிகலா முதல்வராவதில் சிக்கல் ஏற்படவே அதிமுக எம்எல்ஏக்களை அவர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். எம்எல்ஏக்களை 4 சொகுசு பஸ்சில் ஏற்றி கல்பாக்கம் அடுத்து உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்சில் தங்க வைத்துள்ளனர். எம்எல்ஏக்கள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளதாக தகவல் கிடைத்ததால் சசிகலா நியமித்த பாதுகாவலர்கள் அவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் ஓட்டலின் உள்ளே, வெளியே மற்றும் அந்த பகுதியை சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். எம்எல்ஏக்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களிடம் அனுமதி பெற்றுதான் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பேசுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாராவது பேசி தங்கள் பக்கம் இழுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக அதிகளவில் கெடுபிடி காட்டப்படுகிறது. மேலும், அப்பகுதியில் மக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது போல் மன்னார்குடி பாதுகாவலர்கள் கடும் கெடுபிடிகள் செய்கின்றனர். இதனால், கிராம மக்கள் சகஜமாக கடைவீதிகளுக்கு சென்று வர முடியவில்லை. யாராவது சென்றால், ‘‘நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்? எதற்கு செல்கிறீர்கள்? என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பத்திரிகையாளர்களும் சசிகலா ஆதரவாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் கிராம மக்கள் கோபமாகி, சசிகலா ஆதரவாளர்களுடன் தகராறு செய்தனர். இதனால் சசிகலா தரப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அங்கு வந்த திண்டிவனம் நகர முன்னாள் சேர்மன், ‘‘இரவு 7 மணிக்கு எல்லா எம்எல்ஏக்களும் சென்று விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் சகஜமாக சென்று வரலாம்’’ என்று கூறி மக்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் இரவும் எம்எல்ஏக்கள் அங்கேயே இருந்ததால், தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அமைச்சர்கள் எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் வாகனங்கள் மட்டும் வெளியே வந்தபடியும், உள்ளே சென்றபடியும் இருந்தன.
இந்த நிலையில், எம்எல்ஏக்கள் தொடர்ந்து அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளதால் இன்றும் சசிகலா தரப்பினர் அப்பகுதி மக்களிடம் கெடுபிடி காட்டினர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும், இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். கோல்டன் பே ரிசார்ட்சில் நீச்சல் குளம், பார் என சகல வசதிகளும் உள்ளது. நேற்றிரவு சில எம்எல்ஏக்கள் மது அருந்திவிட்டு நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போட்டுள்ளனர். அதில் 4,5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை மற்ற எம்எல்ஏக்கள் சேர்ந்து மீட்டுள்ளனர். மேலும், நேற்று பிற்பகல் முதல் சுமார் 20 முதல் 30 எம்எல்ஏக்கள், ‘‘எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளீர்கள்? செல்போனை கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். ‘‘எங்களை சுதந்திரமாக விடுங்கள். நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம்’’ என்று மன்னார்குடி பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை கண்காணிப்பு
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு எம்எல்ஏவுக்கு தலா 5சி வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக பாதி தொகையும், சசிகலா முதலமைச்சராக ஆனவுடன் மீதி தொகையை தருவதாகவும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது வரை பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் எம்எல்ஏக்களின் வீடுகள், தற்போது எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்ஸ்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.